என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Monday, December 3, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - விமர்சனம்

Cinema Group History

நடிகர்கள்: 
விஜய் சேதுபதி–காயத்ரி
இசை:   வேத்சங்கர்
 ஒளிப்பதிவு: பிரேம்குமார்
இயக்கம்:   பாலாஜி தரணிதரன்
தயாரிப்பு:   வி.எஸ்.ராஜ்குமார்



கதையின் கரு: தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்த இளைஞன்.
விஜய் சேதுபதி, பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஷ்வரன் ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். நான்கு பேரும் கிரிக்கெட் விளையாடும்போது, விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டு விடுகிறது. அதில், அவருடைய வாழ்க்கையில் நடந்த இரண்டு வருட நினைவுகளை இழந்து விடுகிறார். அதில், அவருடைய காதலி காயத்ரியுடனான காதல் மற்றும் திருமண ஏற்பாடுகள் முக்கியமானவை. விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டதும், அவர் இரண்டு வருட நினைவுகளை இழந்ததும் பெண் வீட்டாருக்கு தெரிந்தால், நடைபெற இருக்கும் காதல்–கலப்பு திருமணம் நின்று விடும். அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை யாருக்கும் தெரியாமல் நண்பர்கள் மூன்று பேரும் மறைக்கிறார்கள்.
நண்பர்களின் முயற்சி வெற்றி பெற்றதா, விஜய் சேதுபதிக்கு நினைவு திரும்பியதா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’
வித்தியாசமான நகைச்சுவை படம்.
தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்த விஜய் சேதுபதியின் முகபாவனைகளும், நடிப்பும் சிரிக்க வைக்கிறது. ‘‘என்ன ஆச்சு? கிரிக்கெட் ஆடினோம். நீதான் அடிச்சே. நான் கேட்ச் பிடிக்கப் போனேன். தடுமாறி கீழே விழுந்தேன். இங்கதான் அடிபட்டது. கொஞ்ச நேரத்துல சரியாகிடும்’’ என்று அவர் நண்பர்களிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது, சூப்பர் காமெடி. அவரை நண்பர்கள் மூன்று பேரும் மனநல மருத்துவரிடம் அழைத்துப் போவதும், சமாதானப்படுத்தி மணமேடை வரை கொண்டு செல்வதும், அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் காட்சிகள். காதலி சம்பந்தப்பட்ட நினைவுகளை அடியோடு மறந்து, மணமேடையில் தன் அருகில் நிற்கும் காயத்ரியை பார்த்து, ‘‘இந்த பொண்ணு யாரு?’’ என்று விஜய் சேதுபதி கேட்கும் இடத்தில், தியேட்டரில் ஆரவாரம் அடங்க வெகுநேரமாகிறது.
காயத்ரிக்கு ஒப்பனை அதிகமாக இருப்பதை பார்த்து, ‘‘பேய் மாதிரி இருக்கு’’விஜய் சேதுபதி சொல்வது; அதைக்கேட்டு காயத்ரி விம்மி அழுவது; ‘‘டேய், நான் என்ன சொன்னாலும் கேட்பாய் இல்லையா?’’ என்று விஜய் சேதுபதியிடம் நண்பர் கேட்க– ‘‘நீ சொன்னா இந்த கட்டிடத்தில் இருந்து கூட குதிப்பேன்டா’’ என்று விஜய் சேதுபதி சொல்வது; அதைப்பயன்படுத்தி அவரை நண்பர் கட்டுப்படுத்துவது என நிமிடத்துக்கு நிமிடம் படத்தில், காமெடி ரகளை.
விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட பாதிப்பை பெண் வீட்டாரிடம் மறைப்பது சரி. அவர் பெற்றோர்களிடம் கூட சொல்லாமல், மூடி மறைப்பது ஏன்? என்ற கேள்விக்கு, படத்தில் பதில் இல்லை.
வேத்சங்கரின் பின்னணி இசையும், பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் கதையை வேகமாக நகர்த்தி செல்லும் அம்சங்கள். ஒரு வீடு, ஆஸ்பத்திரி, கல்யாண மண்டபம் ஆகிய மூன்று அரங்குக்குள் முழு கதையும் சொல்லப்படுகிறது. திரைக்கதை பலமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தால், சிக்கனமாக படம் எடுத்து ஜெயிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார், டைரக்டர் பாலாஜி தரணிதரன்

No comments:

Post a Comment